அளவுக்கு அதிகமாக மருந்து செலுத்தி 100 பேரை கொன்ற தாதி

ஜெர்மனியில் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து தாதியொருவர் 100 பேரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த 41 வயதான ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் என்ற இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரிந்தார்.

அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்த நிலையில் அதில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் நோயாளிக்கு வைத்தியர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இவரது சிகிச்சையின் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் கடந்த 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் வைத்தியசாலையில் 35 பேரும் இவரால் உயிரிழந்துள்ளமை தெரியவந்தது.

இந்த கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் உலகப் போருக்கு பின் நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!