உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிய இடங்களில் அது ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு ஈபிடிபியிடம் கோரியமை ‘‘கோட்பாட்டு அரசியலே’’ தவிர அது கட்சிகளுக்கு இடையிலான ‘‘டீல்’’ அல்ல.
இவ்வாறு தெரிவித்தார் ரெலோ கட்சியின் செயலாளர் ந.சிறிகாந்தா. “டீல் பேசுகின்ற அரசியல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அகராதியிலேயே இல்லை’’ என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் தாம் ஆட்சி அமைப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈபிடிபியின் தலைவர்களுடன் விடாது தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தார்கள் என்று அந்தக் கட்சியினர் தெரிவித்திருந்தனர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்குக் கருத்துத் தெரிவிக்கும் வகையிலேயே சிறிகாந்தா இதனைத் தெரிவித்தார்.
‘‘யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் கூட்டமைப்பு ஆட்சியமைப்பது என்றும் தீவகத்தில் உள்ள மூன்று சபைகளிலும் ஈபிடிபி ஆட்சியமைப்பது என்றும் ‘டீல்’ பேசப்பட்டது. தாம் ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், மாவை சோ.சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் விடாது பேசினர். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன’’ என்று ஈபிடிபியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் க.சிறீரங்கன் தெரிவித்திருந்தார் என்று ஊடகச் செய்திகள் கூறின.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் ரெலோவின் செயலாளர் நாயகம் ந.சிறீகாந்தா நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்தார். சபைகளில் ஆட்சியைப் பிடிப்பது தொடர்பில் ஈபிடிபியுடன் பேச்சுக்களை ஆரம்பித்தவரும் இவரே. நேற்றைய சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கக் கூட்டமைப்பு ஆதரவு கோரியிருந்ததாக ஈ.பி.டீ.பி. சாா்ந்தவா்கள் தொிவித்திருந்தனா். நாங்கள் அதனை ஆதரவு என்று கூறவில்லை. மாறாக ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அந்தக் கட்சியுடன் கலந்துரையாடினோம்.
சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளே அந்தந்தச் சபைகளில் ஆட்சியமைப்பது, அதற்கு மற்றைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவது என்ற நோக்கிலே கலந்துரையாடப்பட்டது. இது எந்த வகையிலும் ‘டீல்’ ஆகிவிடாது, அத்துடன் அத்தகைய ‘டீல்’ அரசியல் தமிழ் கூட்டமைப்பின் அகராதியிலே இல்லை.
மேலும் டக்ளஸ் தேவானந்தா உட்பட்டவா்களுடன் பேசியது ரேலோவே தவிர தமிழத்தேசியக்கூட்டமைப்பல்ல – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!