எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அவரை முழுமையாகப் பாதுகாக்கும். இந்தத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைப் பாதுகாப்பதில் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசில் உள்ள நிலையில் அதன் ஒரு தரப்பினர் எதிர்க்கட்சியில் இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்தக் காரணம் கொண்டும் அரசியல் ரீதியான சூழ்ச்சிகளுக்கும் நகைச்சுவை பாங்கான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக்கூட்டு எதிர்க்கட்சியால் கோர முடியாது.
அரசியல் நோக்கங்களுக்காகவே எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குக் கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
ஆரம்பத்தில் அரசை வீழ்த்துவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதனை நாம் தவிடுபொடியாக்கினோம். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியின் மீது கூட்டு எதிர்க்கட்சியின் அவதானம் திரும்பியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒன்றில் அரசில் இருக்க வேண்டும். இல்லையேல் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும். பாதி அரசில் மீதி எதிர்க்கட்சியில் என்பது வேடிக்கையானது. எனவே கூட்டு எதிர்க்கட்சியால் எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோர முடியாது. என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!