‘நானே அமைச்சர்” : 118 பெரும்பான்மை எம்மிடம் இருக்கின்றது என்கிறார் சம்பிக்க

மஹிந்த மைத்திரி கூட்டிணைந்து அமைத்துள்ள சட்டவிரோத அரசாங்கத்தில் புதிய அமைச்சர்கள் பலர் நியமிக்கப்பட்டாலும், பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு என்னுடையதே என ஜாதிக ஹெலஉறுமய உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டும் போது 118 பெரும்பான்மையை நிரூபித்து மஹிந்த அணியினரை வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் சவால் விடுத்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது சட்டவிரோத பணப்பலத்தை பயன்படுத்தி எம்.பி.க்களை தனது பக்கம் திசைதிருப்ப முயற்சி செய்கின்றார் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த 26ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பல புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம்வகித்தவர்கள் தமது அமைச்சு பதவிகளை கைவிட்டு, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு, அரசியலமைப்புக்கு முரணான வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறி பாராளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டுமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு சென்ற சம்பிக்க ரணவக்க எம்.பி., அலுவலகத்தின் கதிரையில் அமர்ந்து இது என்னுடைய அமைச்சும் என்றும் நான் தொடர்ந்து எனது பொறுப்புக்களை முன்னெடுப்பேன் எனவும் அங்குள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பிக்க ரணவக்க எம்.பியை தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!