புதுடெல்லி சென்றார் ஒஸ்ரின் பெர்னான்டோ – புதிய தூதுவராக பொறுப்பேற்கிறார்

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள சூழலில், இந்தியாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஒஸ்ரின் பெர்னான்டோ, கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.

புதுடெல்லியில் சிறிலங்கா தூதுவராக 25 மாதங்கள் பணியாற்றிய சித்ராங்கனி வகீஸ்வரா கடந்த 31ஆம் நாள் கொழும்பு திரும்பினார்.

இந்தநிலையிலேயே, ஒஸ்ரின் பெர்னான்டோ கடமையைப் பொறுப்பேற்பதற்காக, புதுடெல்லிக்குச் சென்றுள்ளார்.

புதுடெல்லியைச் சென்றடைந்த பின்னர் கருத்து வெளியிட்டுள்ள ஒஸ்ரின் பெர்னான்டோ, ‘நாங்கள்( சிறிலங்காவும் இந்தியாவும்) நண்பர்கள் மாத்திரமல்ல, உறவினர்களும் கூட.” என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள நிலையிலும், சிறிலங்காவின் புதிதாக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியா இன்னமும் அங்கீகரிக்காத சூழலிலும், புதிய தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ புதுடெல்லியில் கடமையை பொறுப்பேற்கச் சென்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!