அடுத்த அரச தலைவருக்கான தேர்தலில் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவாரென அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸநாயக்க அடித்துக் கூறியிருக்கிறார்.
தாம் அடுத்த தடவை அரச தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லையென்ற மைத்திரிபால சிறிசேனாவின் அறிவிப்புக்கு எதிரானதாகவே துமிந்த வின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெற்கில் முக்கிய கட்சிகள் இரண்டும்
உறுதியற்ற நிலையில்
தென்பகுதி அரசியலில் ஏகப்பட்ட குழப்பங்கள் காணப்படுகின்றன. பிரதான கட்சிகள் இரண்டுக்குள்ளும் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது இது வெட்ட வௌிச்சமானது.
சுதந்திரக் கட்சிக்குள் மகிந்தவின் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் சமயம் வரும்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகச் செயற்படுவதைக் காணமுடிகின்றது. அதேபோன்று, ஐ.தே. கட்சியின் தலைவரும், தலைமை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க வுக்கு எதிரான போக்கை ஐக்கிய தேசியக் கட்சியினுள் சிலர் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த அரச தலைவருக்கான தேர்தல் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக அமையப்போகின்றது. கடந்த தடவை போன்று மைத்திரிபால சிறிசேனவை ரணில் ஆதரிப்பார் என எதிர்பார்க்க முடி யாது.
இந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களில் பலரும் அவரைத் தேர்தலில் போட்டியிட வற்புறுத்தி வருவதாகவும் தெரிகின்றது.
தமக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதால் ரணில் விக்கிரமசிங்க வின் செல்வாக்கு திடீரென அதிகரித்து விட்டதைக் காணமுடிகின்றது.
ரணிலைத் தலைமை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி விடுமாறு அரச தலைவர் மைத்திரிபால கேட்டுக் கொண்ட பின்னரும், அவ்வாறு செய்யாமல் துணிவுடன் தமக்கெதிரான தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றமை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மட்டுமன்றி முழு நாட்டிலுமே அவரது மதிப்பை உயர்த்திவிட்டது.
இதேவேளை தீர்மானத்தைக் கொண்டுவந்த மகிந்த, மக்கள் தம்மை ஏளனமாகப் பார்க்கின்ற நிலை மைக்குத் தள்ளப்பட்டு விட்டார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்பாராமல் கிடைத்த வெற்றியையும், அதனால் கிடைத்த நன்மதிப்பையும் அவர் வீணடித்து விட்டதாகவே கருத முடிகின்றது.
இதைவிட மூன்றாவது தடவையாகவும் அரச தலைவர் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது என்பதால், அவரது சார்பில் அவருக்கு நம்பிக்கையான ஒருவர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
கோத்தபாய ராஜபக்ச களத்தில் இறங்குவாரென எதிர்பார்ப்புக்கள் நிலவு கின்ற போதிலும், கடைசி நேரத்தில் இதில் மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் இலங்கை அரசியல், குழம்பிய குட்டையின் நிலையில் காணப்படுவதால் எதனையும் உறுதியாகக் கூற முடியவில்லை.
அடுத்த அரச தலைவருக்கான தேர்தலில்
பலமுனைப் போட்டிகளை எதிர்பார்க்க முடியும்
இங்கு சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சியை நடத்துவதாகக் கூறப்படுகின்றபோதிலும், உண்மையான ஐக்கியத்தை இங்கு காணமுடியவில்லை. இழுபறி நிலையைத் தான் இங்கு காண முடிகின்றது.
இந்த நிலையில் அடுத்த அரச தலைவருக்கான தேர்தலில் பலமுனைப்போட்டி இடம் பெறும் என்ற ஊகத்தை மறுத்து உரைக்க முடியாதுள் ளது. சிறுபான்மை இனத்தவர்களும் களத்தில் இறங்கக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
முன்னர் ஒருமுறை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த குமார் பொன்னம்பலம் அரச தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டமை நினைவுக்கு வருகின்றது.
தமிழர்களே அவருக்கு வாக்களிக்க முன்வராமையால் சுமார் ஒரு இலட்சத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளையே அவரால் பெறமுடிந்தது.
இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் நிராகரிக்கப்பட்டவை போக எஞ்சுபவற்றில் 50 வீதத்துக்குச் சமனான வாக்குகளைப் பெறுகின்ற ஒருவரே அரச தலைவராக முடியும்.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரச தலைவராகி விடக்கூடாது என்பதற்காகவே அரசமைப்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிறுபான்மையின ரின் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் தேர்தலில் வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியும். கடந்த தடவை இதுதான் நடந்தது. சிறு பான்மையின மக்களின் வாக்குகளே மைத்திரிபால சிரிசேனவை அரச தலைவராக்கியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அரச தலைவர் தேர்தலின் வெற்றி தோல்வி இம்முறையும் சிறுபான்மைத் தமிழ் மக்களது கைகளிலேயே
இந்த தடவையும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் பல முனைப் போட்டியில் இறங்கினால், சிறுபான்மை மக்களின் உதவியை அவர்கள் நாடவேண்டிய நிலை உருவாகும். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கின்ற உதவி தமிழ் மக்களிடமிருந்து கிடைக்குமா? என்பது சந்தேகமானதே.
ஏனென் றால் கடந்த தடவை மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து ஏமாந்து போனவர்கள் மீண்டும் அதே தவறைப் புரிவதற்கு முன்வர மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்ககூட தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அக் கறை செலுத்தாததால், அவருக்கும் தமிழர்களது ஆதரவு கிடைக் கப்போவதில்லை.
மகிந்த தரப்பிலிருந்து வேட்பாளராக எவர் நிறுத்தப்பட்டாலும், அவரையும் நிராகரிப்பதற்குத் தமிழர்கள் தயங்க மாட்டார்கள். இதனால் கடந்த 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்தது போன்று மீண்டும் நிகழக்கூடுமென எதிர்பார்க்க முடியும். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது எதிர்வரும் அரச தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் திருப்பங்கள் பல நிறைந்த தொன்றாகவே அமையப் போகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!