ஜனநாயக விரோத செயலை புரிந்த சிறிசேனவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் : தினகரன்

ராஜபக்ஷவிற்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சிப்பது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது,

‘ இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

இலங்கையில் தமிழர் இன அழிப்பை முன்னெடுத்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமராக அறிவித்த கொடுமையை, அந்நாட்டு பாராளுமன்றம் முறியடித்துவிடும் என்று உலகமே எதிர்நோக்கியிருந்த நேரத்தில், இந்த ஜனநாயக விரோத செயலை புரிந்த சிறிசேனவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனவெறி கொண்ட ராஜபக்ஷவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிக்கும் இச்செயல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா. சபை உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை அழிக்கும் இந்த அக்கிரமச் செயல் வீழ்த்தப்பட வேண்டும்.’ என்று அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!