தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு!

கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பியது. இதற்கிடையே காவிரியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான பங்கை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி, அதாவது கர்நாடகம்-தமிழக எல்லையான பிலிகுண்டலுவில் செல்லும் நீரின் அளவுப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்குமுறை குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. அதையடுத்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்து விடக்கூறி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது.

அதையடுத்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவிடமும், நீர்ப்பாசன துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும், காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் திட்டு வாங்க முடியாது என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணை முன்பு கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கோஷமிட்டனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு நகலையும் தீயிட்டு எரித்தனர்.

கைகளில் கருப்பு துணி கட்டிக்கொண்டும், வாயில் அடித்துக் கொண்டும் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 7,380 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் பிலிகுண்டலுவில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. தண்ணீர் திறப்பையொட்டி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 101.28 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 2,357 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது பற்றி அறிந்த விவசாயிகள் சங்கத்தினர் தர்ஷன் புட்டணய்யா எம்.எல்.ஏ. தலைமையில் கே.ஆர்.எஸ். அணை முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த மண்டியா மாவட்ட கலெக்டர் குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தர்ஷன் புட்டணய்யா எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து காவிரியில் தண்ணீர் திறப்பை நிறுத்தக்கூறி கோரிக்கை விடுத்து தர்ஷன் புட்டணய்யா கலெக்டர் குமாரிடம் மனு கொடுத்தார். அதை கலெக்டர் பெற்றுக் கொண்டு இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!