வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று சற்று நேரத்தில் கூடவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பான நிலையில் உள்ளது. இரண்டு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று நேரகாலத்துடனேயே சபைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

கட்சித் தலைவர்கள் கூட்டம் காலை 8.30 மணிக்கு ஆரம்பமானதால், பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே சபைக்கு வந்தனர்.

கடந்த சிலநாட்களாக கீரியும் பாம்புமாக மோதிக் கொண்டிருக்கும் மகிந்த-மைத்திரி அணி மற்றும் ஐதேக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஒன்றாக கட்டிப்பிடித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது.

ஐதேகவின் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கட்டியணைத்து சிரித்தடி உரையாடிக் கொண்டிருந்தனர்.

அதுபோன்று நாமல் ராஜபக்ச மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோருடன், சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க ஆகியோர் சிரித்தபடி அளவளாவிக் கொண்டிருந்தனர்.

வசந்த சேனநாயக்க சுதந்திரமாக செயற்படுவார்

நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தாம் சுதந்திரமாகவே செயற்படப் போவதாக, ஐதேகவில் இருந்து தாவி, அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்ட வசந்த சேனநாயக்க சற்று முன்னர் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!