சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு, மகிந்த ராஜபக்ச, நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், ஐதேக தரப்பு, தாம் இரண்டு முறை நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றிய பின்னரும், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கம் இனிமேல் பதவியில் இருக்க முடியாது என்று வலியுறுத்தியது.
அதற்கு மகிந்த ராஜபக்ச, எந்த நேரத்திலும் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும், ஆனால், தனக்கும் தனது அரசாங்கத்துக்கும் எதிராக ஐதேக முறைப்படி நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட பல உறுப்பினர்கள், அந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, கடைசிநேரத்தில் பின்வாங்கியிருந்தனர்.
எனவே, நாடாளுமன்றத்தில் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை, வெறும் கையெழுத்து ஆவணம் மூலம் ஏற்றுக் கொள்ள முடியாது.
நாடாளுமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கு எல்லாக் கட்சிகளும் தனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!