தோசை சட்டியால் அடித்து கணவரை கொலை செய்த மனைவி வாக்குமூலம்

சேலம் அருகே தோசை சட்டியால் அடித்து கணவரை கொலை செய்த மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு, பார்வதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

செல்வகுமார் கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜி.டி.பி. கிரானைட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.

கடந்த 10-ந்தேதி அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடந்த 15-ந்தேதி இது குறித்து செல்வகுமாரின் தந்தை மாது, தாய் பாப்பா ஆகியோர் ஐஸ்வர்யாவிடம் கேட்டனர். அதற்கு அவர், கணவர் வேலையை விட்டு நின்றதற்கான பணத்தை வாங்குவதற்காக தொழிற்சாலைக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.

நேற்று மதியம் வீட்டின் அருகே கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. உடனே உறவினர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது கிணற்றுக்குள் செல்வகுமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது உடலை கருப்பூர் போலீசார், ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறி ஐஸ்வர்யா கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அப்போது அவர், போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு சொந்த ஊர் கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதி ஆகும். எனது பெற்றோர் கருப்பூர், உப்புகிணறு, பார்வதி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வார்கள். இதில் செல்வகுமாரின் பெற்றோருக்கும், எனது பெற்றோருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதன் மூலம் நன்கு தெரிந்தவர்கள் என்ற முறையிலும், பக்கத்து ஊர் என்பதாலும் எனக்கும், செல்வகுமாருக்கும் சம்பந்தம் பேசி திருமணம் செய்து வைத்தனர். இரு வீட்டார் பெற்றோர் முன்னிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்தது.

செல்வகுமாரின் சொந்த ஊர் மேச்சேரி அருகே உள்ள நரியனூர் பகுதியாகும். குடும்பத்துடன் அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பார்வதி தோட்டம் பகுதியில் குடியேறி விட்டனர். கருப்பூர் பகுதியில் உள்ள ஜி.டி.பி. கிரானைட் நிறுவனத்தில் செல்வகுமார் வேலை பார்த்து வந்தார்.

திருமணம் முடிந்த உடனே தனிக்குடித்தனம் நடத்த முடிவு செய்து, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகை வீடு எடுத்து, அங்கு இருவரும் குடியேறினோம். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகள் கரும்பாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறாள். எனது கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவு மற்றும் மகள் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்.

எங்களது வீட்டின் அருகே மாமனார் மாது, மாமியார் பாப்பா ஆகியோர் குடியிருந்து வருகிறார்கள். அவர்களிடம் இருந்து அடிக்கடி குடும்ப செலவுக்கு பணம் வாங்கி வந்தேன். அவர்களிடம் இருந்து குடும்ப செலவுக்கு எத்தனை நாட்களுக்குத் தான் பணம் வாங்கி முடியும்.

இதனால் நான், செல்வகுமாரிடம் உங்களுக்கு போதிய சம்பளம் இல்லாததால், நீங்கள் கிரானைட் தொழிற்சாலையில் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று கூறினேன். இதனால் செல்வகுமார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா எழுதி கொடுத்து விட்டு வேலையை விட்டு நின்று விட்டார். பின்னர் வேறு வேலையும் கிடைக்கவில்லை. வீட்டிலேயே இருந்து வந்தார். தொழிற்சாலையில் வேலையை விட்டு நின்றதற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணம் மற்றும் சர்வீஸ் பணம் ஆகியவை செல்வகுமாருக்கு வர வேண்டி உள்ளது. இந்த பணத்தை போய் வாங்கி வாருங்கள் என்று நான் வற்புறுத்தினேன் ஆனால் அவர் மறுத்து விட்டார். அந்த பணம் எனது 2 குழந்தைகளுக்கும் என்றார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ரவி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அன்பாக பேசி பழகி வந்தார். அவரிடம் எனது வீட்டில் உள்ள குடும்ப பிரச்சினைகள் குறித்து தெரிவித்தேன். அதற்கு அவர், உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்றார்.

முதலில் நாங்கள் இருவரும் நட்பாக தான் பழகினோம். பின்னர் நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நான் வீட்டில் இருந்து தினமும் மணிக்கணக்கில் செல்போனில் அவரிடம் பேசி வந்தேன்.

இந்த நிலையில் தோழி ஒருவரும் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து ரவி பற்றி பேசி அவர் மீது ஆசையை மேலும் வளர்க்கும் வகையில் எனது மனதை மாற்றி வந்தார்.

இதனிடையே தினமும் காலையில் எனது மகளை அழைத்து சென்று பள்ளியில் விட்டு வரும்போது என்னுடன் பேசுவதற்காக அதே பகுதியில் கள்ளக்காதலன் காத்திருப்பார். அவருடன் நீண்ட நேரம் பேசி பழகி வந்தேன்.

எங்களது இந்த கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரியவந்தது. அவர் என்னை கண்டித்தார். அந்த வாலிபருடன் பழகாதே, அவன் நல்லவன் கிடையாது. உன்னை ஏமாற்றுகிறான் என்று கூறினார். மது குடித்து வந்தும் செல்வகுமார் தகராறில் ஈடுபட்டார்.

தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் எனக்கும், செல்வகுமாருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் மாமனார், மாமியாரிடம் எனக்கு உங்களது மகனுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறினேன். அவர்கள், இது எல்லா வீட்டிலும் நடக்கிறது தான் என்று கூறி சமாதானம் செய்து வைத்து வந்தனர்.

இதையடுத்து நான், கணவருக்கு சரியாக உணவு கொடுக்காமல் இருந்து வந்தேன். தொடர்ந்து வீட்டில் சண்டை நடந்து வந்ததால் இது பற்றி ரவியிடம் கூறி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் செல்வகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கான திட்டத்தை ரவி வகுத்து கொடுத்தார். அதன்படி கள்ளக்காதலனுடன் சேர்ந்து சம்பவத்தன்று தோசை சுடும் இரும்பு சட்டியை எடுத்து செல்வகுமாரின் தலையில் ஓங்கி அடித்தோம். இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அப்படியே அவரை தூக்கிக் கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கொண்டு போய் போட்டோம். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னர் நான், எதுவும் தெரியாததை போல் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டேன். கடந்த 15-ந்தேதி கருப்பூர் போலீஸ் நிலையத்தில் எனது கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை மீட்டு தாருங்கள் எனவும் ஒரு பொய்யான புகாரை கொடுத்து நாடகம் ஆடினேன். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் ரவி போலீசாரிடம் சிக்கினார். போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!