பாராளுமன்றம் புண்ணிய பூமியானதன் பின்னரே ஓய்வு பெறுவேன் : காமினி ஜயவிக்கிரம

எனது அரசியல் வாழ்விலிருந்து நான் ஓய்வு பெறுவது பாராளுமன்றத்தை சுத்தமான பூமியாக்கியதன் பின்னர்” என சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்தார்.

பாராளுமன்றில் கடந்த அமர்வில் மிளகாய்த்தூள் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிராக நீதி கோரி பொலிஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் முறைப்பாடு செய்து திரும்பிய காமினி ஜயவிக்கிரம ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த காமினி ஜயவிக்கிரம,

“1972 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க தான் என்னை அரசியலிற்குள் பிரவேசிக்க வைத்தார். அன்றிலிருந்து எனது அரசியல் வரலாற்றில் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்வதற்காக வந்தது இதுவே முதல் தடவையாகும்.

அப்பாவி பொதுமக்கள் அவர்களது வாக்குகளால் எம்மை பாராளுமன்றிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் அவர்களிற்கு சேவை செய்யும் இடம் சுத்தமான பூமியாக இருக்க வேண்டும்.

ஆனால் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்றினுள் நடந்த விடயங்கள் பாராளுமன்றிற்குள் நடக்கத் தகுதியான விடயங்கள் அல்ல.

மிளாகாய்த் தூள் தாக்குதல் என் மீது நடாத்தினார்கள். அதற்காக நான் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறேன்.

எனது வாக்குறுதியின் படி பாராளுமன்றை சுத்தமான புண்ணிய பூமியாக மாற்ற வேண்டும். எனக்கு நடந்த விடயம் இனிமேல் எவருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.” என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!