நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்கினால் அது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும், அரச தலைவரின் அதிகாரங்களை இன்னும் பலப்படுத்த வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது என்று கூறி நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறை பற்றிய விவாதத்தை மீண்டும் கிளறி விட்டிருக்கிறார் முன்னாள் நீதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ச.
நிறைவேற்று அரச தலைவர் முறையினால் இலங்கை கடந்த 40 வருடங்களாக அனுபவித்த துன்பங்களைத் தொடர்ந்தே அந்த முறையை முற்றாக ஒழிக்கவேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
கடந்த சுமார் 20 வருடங்களாகவே இந்தக் குரல் உறுதியாக ஒலித்து வருகின்றது. நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையை ஒழிப்பேன் என்றுகூறித்தான் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். அதனைப் பின்னர் அவர் செய்யவில்லை என்பது வேறுவிடயம்.
அவர் இரண்டு தடவைகள் பதவியில் இருந்துவிட்டுப் போக, பின்னர் வந்த மகிந்த ராஜபக்சவும் அதையேதான் கூறிப் பதவியைப் பிடித்தார். இப்போது ஆட்சியில் இருக்கும் மைத்திரியும் அதையேதான் கூறினார்.
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையால் சிங்கள மக்களுக்குப் பாதிப்பு அதிகம் என்கிற ஒரு நிலை உணரப்பட்டபோது, அதனை இல்லாது செய்வதில் தெற்கு அரசியல் கட்சிகள் முனைப்போடு நின்றன.
அரச தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்கள் அந்த முனைப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு பதவிக்கு வந்தனர். ஆனால் அதன் பின்னர் தமது வாக்குறுதிப்படி அதிகாரத்தைக் குறைப்பதற்கு அவர்கள் முன்வரவில்லை.
2015ஆம் ஆண்டு கூட்டு அரசு ஒன்றை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டபோதுதான், அடுத்த தடவை அரச தலைவராவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று அறிவித்த மைத்திரிபால சிறிசேன மூலம் அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரங்களை வெட்டிக் குறைப்பது சாத்தியமானது.
ஆனால், இப்போது நிலமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது.
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை தொடரவேண்டும் என்கிற குரல்கள் வலுப்பதைக் காண முடிகின்றது. அதுவும் தமிழர்களுக்கு எதிரான பலம், நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையே என்ற எண்ணத்தைச் சிங்கள மக்களிடம் விதைத்து அதற்கூடாகத் தாம் நன்மையடையும் இனவாதப் போக்கையும் பார்க்க முடிகிறது.
வடக்கு -கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவரான வரதராஜப் பெருமாள் இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்கு முன்பாக தமிழீழத் தனிநாட்டு அறிவிப்பைச் செய்தபோது நாட்டைப் பாதுகாத்தது நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமைதான் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருப்பது இதற்கொரு உதாரணம். நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையை ஒழிப்பது தமிழர்களுக்குத் தனிநாடு கொடுப்பதற்கு ஏதுவாகிவிடும் என்று அப்பாவிச் சிங்கள மக்களுக்குப் பயங்காட்டப்பார்க்கிறார்கள்.
உண்மையில் அரச தலைவர் அதிகாரங்கள் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் இந்த விவாதத்திற்கும், தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி, -சுதந்திரக் கட்சி அதிகாரப் போட்டியே தற்போதைய எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று தெரிவிக்கும் ஜே.வி.பி, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டது போக , அரச தலைவர் மைத்திரிபாலவிடம் எஞ்சியிருக்கும் அதிகாரங்களையும் பறித்துவிடும் நோக்கோடு அரசமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது என்பதே உண்மை.
அத்தகைய ஒரு திருத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், கூட்டு எதிரணியும்கூட ஆதரிக்கும் என்கிற தகவல்களையும் கசியவிட்டு, அதையொரு சர்ச்சையாக்கி தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதில் சிங்களப் பேரினவாதம் மிகக் கூர்மையோடு செயற்பட்டுக்கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது.
எது எப்படியிருந்தாலும், இந்தச் சவாலை எதிர்கொண்டு, நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை முற்றாக ஒழித்து நாடாளுமன்றத்தைப் பலப்படுத்துவதும், நாடாளுமன்றத்துக்கு ஊடாகவே நாட்டை முழுமையாக நிர்வகிப்பதும் உறுதிப்படுத்தப்படுவதை தமிழர் தரப்பு ஆதரிப்பதே தமிழர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!