பொய் பிரசாரங்கள் மூலம் நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏற்படுத்த முனையும் விமல் வீரவன்ச, உதய கம்பன்பில உள்ளிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, பாரிய இனக்கலவரங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் கூட பொலிஸ் அதிகாரிகள் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்களால் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது தண்டிக்க வேண்டிய விடயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
கண்டி – திகணையில் இடம்பெற்ற கலவரத்தின் போது சாதாரண பொது மக்கள் கூட பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை. பல்வேறு உடைமைகளுக்கு தீவைக்கப்பட்ட போதும் சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் மீது எந்த தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
ஆனால் சட்ட திட்டங்களை நன்கு அறிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை மீறி செயற்பட்டுள்ளனர். இவ்வாறு செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்கள்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் இனவாதத்தையும் மத வாதத்தையும் தூண்டிவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தும் இனவாதிகளான உதய கம்பன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!