“ரணிலை ஒரு போதும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள மாட்டார்”

ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாததன் காரணத்தினாலேயே ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவரை பதவியிலிருந்து நீக்கினார்” என அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்களுக்க கருத்து தெரிவிக்கையிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இவ் விடயம் குறித்து கருத்து தெரவித்த கெஹெலிய,

“பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி விட்டு ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் பிரதமராக ஜனாதிபதி நியமிக்க மாட்டார். இவ் விடயத்தை வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய சமர்ப்பிக்கப்படவில்லை அவ்வாறிருக்க அப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வது என்பதே எமது கேள்வியாகும்.

பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டுமாயின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பின்னரே பாராளுமன்றில் சமர்ப்பிக்க பட வேண்டும்.

அவ்வாறு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு 5 நாடகளுக்கு பின்னரே அப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

விவாதத்தின் பின்னர் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

அவ்வாறு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு 113 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அதனை ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த பிரேரணையில் இந்த செயற்பாடுகள் பின்பற்றப்படவில்லை.

வரலாற்றில் ஆளுந் தரப்பு இல்லாது பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளமை எமது நாட்டில் மட்டுமேயாகும்.

பாராளுமன்றில் அதிகாரம் படைத்த சபாநாயகர் நடுநிலைமையாக செயற்படாது கட்சி சார்பாக செயற்படுகிறார். ஆதை நாம் கவனத்தில் கொள்வதாய் இல்லை பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறுபவர்களின் நடவடிக்கைக்கு நாங்கள் கவனம் செலுத்த போவதில்லை.

எது எவ்வாறிருந்தாலும் எதிர் வரும் 7ஆம் திகதி நீதி மன்றம் வழங்கும் தீர்ப்பிற்கமையவே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.” என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!