ஜனாதிபதியின் உளவியல் குறித்து நாட்டு மக்களிடையே பாரிய சந்தேகம் எழுந்துள்ளது – ஹரின்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் குறிப்பிடவில்லை.

மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சாடியுள்ளார்.இச்செயற்பாட்டின் காரணமாக அவரது நன்மதிப்பு குறைந்து வருகின்றது என்பதை நாட்டு மக்களிடம் அவர் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

எவ்விடத்தில் எவ்விடயம் தொடர்பில் கதைக்க வேண்டும் என்ற வரைமுறைகள் இல்லாமலே ஜனாதிபதி தற்போது செயற்படுகின்றார்.

அவரது உளவியல் தொடர்பில் தற்போது நாட்டு மக்களிடையே பாரிய சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் மனநிலை சீராகவா உள்ளது என்று நாட்டு மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். இதுவரையில் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண இவர் எவ்விதமான முன்னேற்றகரமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.

தொடர்ச்சியான அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாட்டின் காரணமாக அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தே வருகின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!