அச்சமூட்டுகிறார் படைத்தளபதி!

வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களை சோதனையிடுவோம் என்ற யாழ்.மாவட்ட கட்டளைத்த ளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இன முரண்பாட்டையும் நல்லிணக்கத்தையும் சிதைக்கும் செயற்பாடு என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து முன்னாள் போராளிகளை அச்சமூட்டுவது மட்டுமன்றி வடக்கில் உள்ள மக்களும் அச்சத்துடன் வாழும் ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது.

யுத்தம் நடைபெற்று யுத்த அழிவில் இருந்து மீண்டெழுந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் தமது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் படைத் தளபதியின் கருத்து அமைந்துள்ளது.

படைத்தளபதி இவ்வாறு அச்சமூட்டும் கருத்தை தவிர்த்திருக்க வேண்டும். தமது இராணுவத்தின் நிலை மற்றும் இராணுவத்தின் கடமைகளை ஆற்றட்டும். ஆனால், சமூக மயப்படுத்தப்பட்டிருந்த போராளிகளை அச்சமூட்டும் வகையில் கருத்துக்கள் தெரிவிப்பதென்பது, மிகவும் வருத்தத்திற்குரியது.

தெற்கில் தோன்றியிருக்கும் பதவிக்குழப்பம் வடக்கில் மக்களை எந்தளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கின்றது என்பதற்கு அப்பால், இந்தக் கொலைச் சம்பவமும் கூட ஏதாவது ஒரு பின்னணியில் நடந்திருக்கலாம் என மக்கள் கருதுகிறார்கள்.

கொலை செய்தவர்கள் யார் என கண்டு பிடிப்பதற்கு முன்னரே, போராளிகள் மீது அந்தப் பழியைத் தூக்கிப் போடும் செயற்பாடு மக்களை தொடர்ந்தும் அச்சத்தில் வைத்திருக்கும் முயற்சி. இவ்வாறு இனங்களுக்கு இடையில் முரண்பாட்டினையும், நல்லிணக்கத்தையும் சிதைக்கும் கருத்துக்களை அதிகாரத் தொனியில் தெரிவிப்பது கண்டனத்திற்குரிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!