புதிய அமைச்சரவையில் இடம்பெறும் ஒரு தொகுதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்பாகப் பதவியேற்கவுள்ளனர். புதிதாக நியமிக்கப்படும் 30 அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.
அபிவிருத்தி, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட மலிக் சமரவீர, அமைச்சரவைப் பட்டியலில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக அமைச்சுப் பதவியை ஏற்பதில்லை என விலகியதால் அந்த அமைச்சுக்கள் மங்கள சமரவீரவின் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நிதி, உட்கட்டுமானம், அபிவிருத்தி என்பன பிரதமர் ரணில் வசம் செல்லும் என்றும் தெரியவருகின்றது.
அதேவேளை, இன்று அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும். நிதி அமைச்சர் உட்பட 15 தொடக்கம் 20 வரையான அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.சட்டம், ஒழுங்கு அமைச்சர் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்கள் அடுத்த சில நாள்களில் பதவியேற்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!