ஐஸ்லாந்தில் சாலை விபத்தில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 3 பேர் பலி.

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விடுமுறையை கொண்டாடுவதற்காக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து நேற்று இரவு ஒரு சொகுசு காரில் அனைவரும் பயணம் மேற்கொண்டனர். பரந்த மணல் சமவெளிப் பகுதியான ஸ்கெய்தரசந்தூரில் உள்ள குறுகிய பாலத்தில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பாலத்தை உடைத்துக்கொண்டு தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் உயிரிழந்தனர். அண்ணன், தம்பி மற்றும் இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் ரேக்ஜாவிக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் ஆம்ஸ்ட்ராங் சாங்சன் மருத்துவமனைக்குச் சென்று, 4 பேருக்கும் அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர் இந்தியாவில் (மகாராஷ்டிரா) உள்ள அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். சாலையில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் சறுக்கி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!