ஆப்பிள் போனை பயன்படுத்திய ஊழியர்களை தண்டித்த ‘ஹ்வாவே’ நிறுவனம்.

தனது போட்டி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்களை பயன்படுத்தியதால் தனது இரண்டு ஊழியர்களை சீன தொலை தொடர்பு நிறுவனமான ஹ்வாவே தண்டித்துள்ளது. போட்டி நிறுவன போனை பயன்படுத்தி புத்தாண்டு வாழ்த்து அனுப்பிய ஊழியர்களை தண்டித்த சீன நிறுவனம். ஊழியர்கள் இருவரும் ஹ்வாவே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட் செய்துள்ளனர். ஐபோனில் இருந்து வெளியிடப்பட்டதை காட்டிக்கொடுக்கும் விதமாக அந்த வாழ்த்துச் செய்தியுடன் ‘ஐ போனில் இருந்து இந்த ட்விட் வெளியிடப்பட்டது’ என்று ஒரு தகவல் வந்துள்ளது.

இதனால் இவ்விரு ஊழியர்களும் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஹ்வாவே பதவி குறைப்பு செய்திருப்பதாகவும், அவர்களின் ஊதியத்தை குறைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உலக அளவில் அதிகம் விற்பனையாகும் திறன் பேசிகளில் சாம்சங் நிறுவனத்துக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் உள்ளது ஹ்வாவே நிறுவனம். கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமையன்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட செய்தி ஒன்று இது குறித்த தகவல்களையும், சம்பத்தையும் விளக்கியுள்ளது. ட்விட்டர் உள்பட பல வெளிநாட்டு வலைதளங்களை சீனா தனது எல்லைக்குள் பயன்படுத்த இயலாதவாறு தடுத்துள்ள போதிலும், பல்வேறு தனியார் வலையமைப்புகள் மூலம் இவற்றை எண்ணற்ற மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சீன அரசின் செய்தி முகமை உள்பட பல்வேறு சீன நிறுவனங்கள் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். சீன அரசின் இந்த இரட்டைநிலை குறித்து அந்நாட்டின் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டியுள்ளார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!