2015 ஆம் ஆண்டு தமிழ் மக் களின் ஆதரவுடன் தெற்கில் மலர்ந்த அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்க முனைந்தது. இந்த முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பங்காளராக இணைந்து கொண்டது.
அரசியல் கட்சிகள் தமது அரசியல் பேரங்களையும் அரசமைப்பு உருவாக்க முயற்சிகளையும் ஒன்றாகக் கலக்க முற்பட்டன. புதிய அரசமைப்பில் இனப்பிரச்சினைத்தீர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அம்சங்களை முதன்மைப்படுத்துதல் கைவிடப்பட்டது.
புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதாக தோற்றம் ஏற்படுமானால், பதவிக்கு வந்த மைத்திரி–ரணில் அரசு தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது என்ற அரசியல் காரணிகள் முதன்மைப்ப டுத்தப்பட்டன.
தெற்கில் மீண்டும் மகிந்த பதவிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கம் முதன்மைப்படுத்தப் பட்டது. சிங்கள இனவாதத் துக்குப் பயந்த நிலையிலேயே அரசமைப்பு உருவாக்கல் முயற்சிகள் முன்னெடு க்கப்பட்டன. இந்த அடிப்படையைப் புரிந்தோ புரியாமலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த முயற்சிகளில் இணங்கிப் போகும் தன்மை காணப்பட்டது.
திசைமாறத் தொடங்கிய புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைப் பொறுத்தவரையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் தமிழரும் கலந்து கொள்ளக் கிடைத்த முதலாவது வாய்ப்பாக இதனைக் கருதினர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை அரச மைப்பில் இடம்பெற வைக்க முடியும் என மனதார நம்பினர். இவர்களை இந்த முயற்சியில் ஈடுபடுமாறு பன்னாடுகளது அரசுகளும் நிர்ப்பந்தித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பன்னாடுகளது அரசுகளும் சிங்கள இனவாதத்தை தெரிந்தோ தெரியாமலோ, குறைவாக மதிப்பிட்டு விட்டனர் போலும். புதிய அரசமைப்பு முயற்சி சிங்கள இனவாதத்தை உசுப்பிவிட்டது. மகிந்தவின் ஊழல்களைத் தாங்க முடியாமல் அவரைப் பதவியில் இருந்து நீக்கி மைத்திரி–ரணில் அரசைப் பதவியில் அமர்த்திய சிங்கள மக்கள், மீண்டும் மகிந்தவின் பக்கம் சாயத் தொடங்கினர். இந்த மகிந்த பூச்சாண்டியால் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் திசைமாறத் தொடங்கின.
புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கு கூட்டு ஆட்சிக்குச் சமமான உரிமைகள் உள்ளன என தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குக் கூறியது. புதிய அரசமைப்பில் நாம் ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்தி இருக்கிறோம் என மைத்திரி–ரணில் அரசு சிங்கள மக்களுக்குக் கூறியது. தமிழ்மக்களுக்கு புலியின் தலையையும், சிங்கள மக்களுக்கு பூனையின் வாலையும் காட்டும் முயற்சி வெளிப்படையாகவே நடந்தது.
இவ்வாறாக இரு சமூக மக் களையும் ஏமாற்றும் இந்த அரசியல் நாடகத்தின் மத்தியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழர் வேண்டுவது என்ன என்பதை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உரத்துச் சொல்ல வேண்டிய தேவை எழுந்தது. அரசியல் கட்சிகள் ஆட்சி அதி காரத்தைத் தக்க வைப்பதற்கு புதிய யாப்பு முயற்சியைப் பலிக்கடா ஆக்கிய நிலையில் இந்தக் குரல் ஓர் அரசியல் கட்சியிடமிருந்து வராமல் பொது மக்கள் தரப்பிலிருந்து வரவேண்டும் என்ற தேவை உணரப்பட்டது.
இவ்வாறான பின்னணியி லேயே, தமிழ் மக்கள் பேரவை 2016 ஆம் ஆண்டு உதயமானது. தமிழ் மக்கள் மத்தியிலிருந்த அரசியல் ஆர்வலர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சேர்ந்து இதனை ஆரம்பித்தனர். எந்த ஒரு கட்டத்திலும் இது ஓர் அரசியல் கட்சியாக மாற்றமடையாது என்ற கோட்பாட்டுடன் இது ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( சுரேஸ் அணி ), தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் ஆகிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயலாற்றத் தொடங்கின. தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கும் அது மேற்கொண்ட ‘‘எழுக தமிழ்’’ போன்ற நிகழ்வுக ளுக்கும் எதிர்ப்பை வௌியிட்டனர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.
தமிழ்மக்கள் பேரவையின் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள்
தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக இல்லாமல் வெகு ஜன அமைப்பாகச் செயலாற்றும் என்ற வகையில் தமிழர் பகுதிகளில் ஏற்கனவே இயங்கி வந்த தொழிற் சங்கங்களும், சிவில் சமுக அமைப்புக்களும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயலாற்ற முன்வந்தன. வடக்கிலும் பின்னர் கிழக்கிலும் ‘‘எழுக தமிழ்’’ நிகழ்வுகளைப் பலதரப்பினரின் ஒற்றுமையுடன் பேரவை வெற்றிகரமாக நடத்தியது.
இவ்வாறாக தமிழர் தரப்பின் பல்வேறு தரப்புக்களையும் பின்னணிக ளையும் கொண்ட வெகுஜன இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை பரிணமித்தது.
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் தமிழர் வேண்டுவதென்ன என்பதை அரசியல் கட்சிகளுக்கும், பன்னாடுகளுக்கும் வெகுஜனத்தின் குரலாக எடுத்துச் சொல்லும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது. இந்த அமைப்பைத் தோற்றுவித்த தலைவர்கள் ஆரம்பத்தில் இந்த வரலாற்றுக் கடமையின் தார்ப்பரியத்தை உணர்ந்தவர்களாகவே காணப்பட்டனர்.
ஆயினும், இந்தத் தலைவர்களில் முதலமைச்சர் உள்ளிட்ட எல்லோரும் தமது தொழில்சார் துறைகளில் முன்னணியில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஒரு வெகுஜன அமைப்பை உருவாக்குவதில் முன் அனுபவம் இருக்கவில்லை. அமைப்பை உருவாக்குவதற்குச் செலவழித்த நேரமும் குறைவு.
இதனால் நேரம் கிடைத்தவர்கள் தமது தனிமனித ஆளுமைகளைப் பயன்படுத்தியும், தன்னிச்சையாகவும் அமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.
இதில் நகைப்புக்கிடமானது என்ன வெனில், புதிய அரசமைப்பில் இடம்பெற வேண்டியது என்னவென வலியுறுத்த ஆரம்பித்த அமைப்பு, தனது செயற்பாடுகளை நெறிப்படுத்த ஒரு திட்ட வரைபை உருவாக்கத் தவறிவிட்டது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்த நாளில் இருந்து கணிசமான காலம்வரை இதற்கென ஓர் அலுவலகம் இருக்கவில்லை. இவ்வாறான குறைபாடுகள் பலராலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட போதும், அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தமிழ் மக்கள் பேரவையின் தலைமை வெகுஜன அமைப்புத் தானாக வளர்ந்து விடும் என எதிர்பார்த்தது. அவர்களால் போதிய நேரத்தை இதற்கு ஒதுக்க முடியாத நிலையில் அமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் அவர்களின் ஓய்வு நேர முயற்சியாக ஆகும் நிலை ஏற்பட்டது.
தமிழ். அரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கனடாவின் (TET) தொலைக்காட்சிக்கு 2018 தை மாதத்தில் வழங்கிய நேர்காணலில், தமிழ் மக்கள் பேரவையின் ‘‘எழுக தமிழ்’’ போன்ற நட வடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட முடியுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அரசுடன் இணைந்து புதிய அரச மைப்புத் தொடர்பாகப் பேச்சுகளில் ஈடுபடும் அதே சமயத்தில், அரசின் போக்குக்கு எதிர்ப்பைக் காட்டுவது கடினமாக இருக்கும் எனக் கூறினார். அவ்வாறான முயற்சிகளைக் கூட்டமைப்புச் செய்யாமல் ஏனைய அமைப்பு ஒன்று செய்வதே சாத்தியமானதாக இருக்கும்; பயனுள்ளதாகவும் இருக்கும்.
அரசுடன் பேச்சு மேசையில் அமரும்போது ‘‘எழுக தமிழ்’’ போன்ற நடவடிக்கைகள் கூட்டமைப்புக் கும், தமிழர் தரப்பிலிருந்து அழுத் தம் இருக்கிறது என்பதை அரசுக்கு உணர்த்தப் பயன்படுகின்றன.
எவ்வாறு சிங்களத் தீவிரவாதிகளால் தமக்கு அழுத்தம் இருக்கிறதோ அவ்வாறே தமிழ்த் தீவிரவாதிகளால் கூட்டமைப்புக்கும் அழுத்தம் இருக்கிறது என்று அவர்கள் உணர்கிறார்கள். அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் தீவிரவாதத்தைத் தூண்டாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்தப் பதில், தமிழ் மக்களின் உரிமைக்கான போரில் தமிழ் மக்கள் பேரவையின் பங்கை மிகவும் தௌிவாகவும் அழுத்தமாகவும் முன்வைக்கிறது. அதாவது அரசியல் கட்சிகளுக்கு உள்ள சில கைவிலங்குகள் வெகுஜன அமைப்புக்களுக்கு இல்லை என்பதை அவரது பதில் எடுத்துரைக்கிறது.
தமிழ் மக்கள் பேரவையின் இருப்பு அவசியம்
தமிழ் மக்கள் பேரவையின் நட வடிக்கைகளைப் பல தடவைகள் கடுமையான கண்டித்த சுமந்திரனே, தமிழ் மக்கள் பேரவையின் இருப்பின் அவசியத்தை உணர்ந்து இருக்கிறார். ஆகவே தமிழ் மக்கள் பேரவையின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்து அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புணர்வுடன் கடமையாற்ற வேண்டிய தருணம் இது. வெறும் ஓய்வு நேர முயற்சியாக இதனைக் கருதாமல், வெகுஜன அமைப்பை பலப்படுத்த வேண்டிய தருணம் இது.
இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பு. ஒரு மக்கள் அமைப்புக்கு ஜனநாயகக் கட்டுமானங்களும், ஜனநாயகச் செயற்பாடுகளும் இருப்பது அவசியம். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் எடுக்கப்படும் தீர் மானங்கள் ஒரு கட்டுக்கோப்பான, நிறுவன ரீதியாகவோ ஜனநாயக நடைமுறைகளுக்கூடாகவோ எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகளான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து செயற்பட விழைந்தன. அதற்கு மக்கள் பேரவை பின்னி ருந்து ஆதரவளிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட இந்தத்தேர்தலில் ஒரு தலைமையை வழங்கக்கூடிய சந்தர்ப்பம் தமிழ் மக்கள் பேரவைக்கு இருந்தது. ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான முடிவெடுக்கும் முறைகள் அங்கு நிறுவப்படாமல் இருந்ததால், இறுதியில் முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்தே இறுதி முடிவானது.
இதனால் நடுவிலிருந்து பேரம் பேசக்கூடிய தலைமை இல்லாமையால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இணைந்து செயற்பட முடியாமல் பிரிந்தன. தமிழ் மக்களின் வாக்குகள் சிதறின.
இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க சமயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் நிறுவனப்படுத்தலில் இருந்த குறைபாடு கள் காரணமாக, முடிவெடுப்பதில் ஏற்பட்ட குழப்பங்களால் பேரவையின் செல்வாக்குச் சரியத் தொடங்கியது. உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நடந்த தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்திலும் முதல்வர் விக் னேஸ்வரன் தமது அபிமானத்துக்குரியவர்களை அழைத்து வந்து அவர்களைப் பேரவையில் இணைத்துக் கொள்ளமாறு கோரினார்.
ஒரு வெகுஜன அமைப்பில் சேருவதற்கு எல்லோருக்குமே உரிமையுண்டு. ஆனால் ஒரு வெகுஜன அமைப்பில் அங்கத்தவர்களை இணைப்பதற்கும், நீக்குவதற்கும் நிறுவனமயப்பட்ட செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தலைமைக் குழுவில் இருந்தவர்கள் பலருடனாவது கலந்துரையாடியதாக இருக்க வேண்டும்.
தன்னிச்சையானதாக இருக்கக்கூடாது. தமிழ் மக்கள் பேரவையில் முடி வெடுப்பதில் தனிநபர் ஆளுமைக்கான ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இது பேரவையில் உள்ள பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியதை உணர வேண்டிய தருணம் இது. இது தொடருமானால், பேரவையின் அழிவுக்கே வழிவகுக்கும்.
முக்கியமாகப் பெயரளவில் மக்கள் அமைப்பாக இருக்கா மல் அதற்கான சட்ட அமைப்பையும், நிறுவனமயப்பட்ட ஜனநாயகக் கூட்டமைப்பையும், வேலைத்திட்டங்களையும் வகுத்துக்கொள்ள வேண் டும்.
இன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு இலங்கையைப் பொறுப்புக் கூறவைத்தல் போன்ற விடயங்களையும் தாண்டி, தமிழர் தாயகத்தில் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும் ஏராளம் உள்ளன. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக் கான போராட்டம், காணி விடுவிப்புக்கான போராட்டம் என்பவற்றுக்குத் தமிழ் மக்கள் பேரவை தலைமை தாங்க வேண்டும். இந்தத் தலைமையின் ஊடாக அரசியல் கட்சிகளுக்கு இப்பிரச்சினைகளைத் தீர்க்கச் சொல்லி அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்.
‘சிந்தனையாளர் குழாம்’ இல்லாத குறை உணரப்படுகிறது
எங்களிடம் ஒரு சி।ந்தனையாளர் குழாம் (Think Tank) இல்லாத குறையை இன்று தமிழினம் கடுமையாக எதிர்கொள்கிறது. தமிழ் மக்கள் பேரவை ஆலமரமாக வளர்ந்து கிளை பரப்பியிருந்தால், தமிழ் மக்களின் அத்தனை பிரச்சினைகளை யும் அதனால் இலாவகமாகக் கையாண்டிருக்க முடியும். சிந்தனையாளர் குழாம் ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையிடம் உள்ளது. ஆனால் அது செயற்றிறனின்றி உள்ளமை கவலையளிக்கிறது. கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் எமது மக்கள் பின்தங்கியே நிற்கிறார்கள்.
தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்களும் ஆளுமைப் பொறுப்பில் உள்ளவர்களும், இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்குமானால், அவர்கள் தமது பதவிகளுக்கும் பொறுப்புக்களுக்கும் ஏனையவரை நியமிக்க முயற்சி எடுக்க வேண்டும். அப்பதவிகளையும் பொறுப்புக்களையும் கையேற்க ஒருவரும் முன்வராத நிலை நிலவுமா னால், தமிழ் மக்கள் பேரவை யைக் கலைப்பதற்குக் கூட தயங்கக் கூடாது.
ஏனெனில் செயற்படாத ஓர் அமைப்பை வைத்திருந்து தமிழ் மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குவதை விடுத்து இயலாமையை ஒத்துக் கொண்டு விலகுவதே தர்மம் ஆகும்.
அவ்வாறு தமி।ழ் மக்கள் பேரவை கலைக்கப்படும் பட்சத்தில் அது நிறைவேற்ற நினைக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை எவர் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழலாம். ‘‘வரலாறு, வெற்றிடங்களை விடுவதில்லை.’’ என்று சொல்லப்படுவதுண்டு. தமிழ் மக்கள் பேரவைக்கென வரலாற்றுப் பாத்திரம் உள்ளதால், அது இல்லாதவிடத்து இன்னொரு செயற்றிறனுள்ள அமைப்பு அதன் இடத்தை நிரப்ப உருவாகும். அது வரலாற்று நியதி. ஆகவே செயற்படாமல் இருந்து கொண்டு வழியை மறித்துக் கொண்டு இருப்பதை விடுத்து, ஒதுங்கி வழி விடுவதே தமிழ் மக்களுக்குச் செய்யக்கூடிய நன்மையாகும்.
தெற்கில் ஊழலாலும் பொருளாதாரப் பிரச்சினைகளாலும், உட்கட்சிச் சண்டைகளாலும் மைத்திரி – ரணில் அரசு சிறிது சிறிதாகப் பலமிழந்து கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மகிந்த ராஜபக்சவின் எழுச்சியைக் காட்டுகின்றன. அவர் பிரதிநிதித்து வப்படுத் தும் சிங்கள இனவாதமும், மீண்டும் மேல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தங்க வைக்க மைத்திரி – ரணில் அரசு சிங்கள இனவாதத்தை திருப்திப்படுத்த முற்படுவதைத் தவிர்க்க முடியாது. மகிந்த ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்குலகமும் இந்தியாவும் மைத்திரி – ரணில் அரசின் இந்த நடவடிக்கைகளைத் தடுக்கப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு இணங்கிப் போவதற்கு நிர்ப்பந்திக்கப்படும்.
அதேவேளை மைத்திரி – ரணில் அரசும் இதுவரை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகள் கிடப்பில் போடப்படும். இந்த நிலையில் புதிய யாப்பு உருவாக்க முயற்சிகளை உயிருடன் வைத்திருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் நம்பியிருக்க முடியாது.
அப்படியாக இருப்போமானால், அதில் பலியாகப் போவது தமிழ் மக்களின் அபிலாசைகளே. இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்று, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழ் மக்கள் தரப்பு நியாயத்தை சர்வதேசத்துக்கும் உரத்துச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
தமிழ் மக்கள் பேரவை யால் பிரேரிக்கப்பட்ட அரசமைப்புக்கான முன்யோசனைகளை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியிலும், பன்னாட்டுச் சமூ கத்துக்கும் பரப்ப வேண்டிய அவசியம் உள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!