ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் மார்க் பீல்ட்டை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ஜெனிவா வாக்குறுதிகள் தொடர்பான விவகாரத்தை, பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் எழுப்பினார்.

இதுதொடர்பாக அவர், தமது கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், ”சிறிலங்கா சபாநாயகர் கரு ஜெயசூரியவை லண்டனில் இன்று வரவேற்றேன். சிறிலங்காவின் அண்மைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக நாங்கள் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தினோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள் தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றுவதற்கான அவரது ஆதரவுக்கு ஊக்கமளித்தேன்” என்று கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மனிசா குணசேகரவும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!