11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்

மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு- நாலந்த கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“கடந்தகாலத்தில், நாட்டை உறைய வைத்த கொடூரமான ஒரு படுகொலையுடன் தொடர்புடைய, 11 படையினர் மீதே இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புலம்பெயர் தமிழர்களால் குற்றம்சாட்ட முடியாது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவோ அல்லது கொடூரமான செயல்களில் ஈடுபட்டதாகவோ கூறப்படும் எந்த இராணுவத்தினருக்கும் எதிராக ஆதாரங்களை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

அப்படி வழங்கினால் தான் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

படைகளில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் அல்ல. ரணவிரு பதக்கத்தைப் பெற்றவர்கள் தான் போர் வீரர்கள்.

இராணுவத்தில் 34 ஆயிரம் பேரும், கடற்படையில் 4400 பேரும், விமானப்படையில் 868 பேரும் தான் அவ்வாறு விருதுகளைப் பெற்றுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!