துண்டு துண்டாக வெட்டி படுகொலை: இளம்பெண்ணின் உடல்-தலையை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல்- தலையை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சென்னையை அடுத்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி ஒரு பெண்ணின் வலது கையும் 2 கால்களும் கிடைத்தன. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள குப்பை சேகரிப்பு மையத்தில் இருந்து கொட்டப்பட்ட குப்பையிலேயே கையும், கால்களும் பார்சலில் இருந்தது

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று கை, கால்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் வேட்டை முடுக்கி விடப்பட்டது. கடந்த 5 நாட்களாக சென்னை மாநகர் முழுவதும் போலீசார் தலையை தேடிப்பார்த்தனர். குப்பை மேடுகளிலும், புதர் மண்டிய பகுதிகளிலும் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இளம்பெண்ணின் தலையையும் உடலையும் தேடிக்கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை மாநகர் முழுவதும் மாயமான பெண்களின் பட்டியலை போலீசார் சேகரித்தனர். மொத்தம் 60 பேர் காணாமல் போனது தெரிந்தது. இவர்கள் அனைவரும் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள். காணாமல் போன இந்த பெண்களின் போட்டோ மற்றும் செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, இளம்பெண் கொலை வழக்கு சவாலாகவே உள்ளது. 3 தனிப்படையினர் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதில் துப்பு துலங்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார். கொலையுண்ட பெண்ணை கண்டுபிடிப்பதற்காக போஸ்டர்களையும் போலீசார் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!