தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 155 பேரிடம் விசாரணை- ஒருநபர் விசாரணை கமி‌ஷனின் வக்கீல் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 155 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக ஒருநபர் கமி‌ஷனை சேர்ந்த வக்கீல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. அந்த ஆணையம் தூத்துக்குடி மற்றும் சென்னையில் தனிஅலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

ஒருநபர் ஆணையம் தற்போது தூத்துக்குடியில் 4-ஆம் கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. விசாரணை நிலவரம் குறித்து ஒருநபர் கமி‌ஷனை சேர்ந்த வக்கீல் அருள்வடிவேல்சேகர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் கமி‌ஷன் இதுவரை 155 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. 700 பேர் வரை விசாரணைக்கு ஆஜராவார்கள் என எதிர்பார்க்கிறோம். துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், பலியானவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை முடிந்த பிறகே, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!