வடக்கு மாகாணத் தமிழர்கள் ஒரு சில தரப் பினரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அரச தலைவர் கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாக வடக்கில் இடம் பெறுகின்ற போராட்டங்களின் பின்னணியில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாகவும் அவர் கூறியதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
எப்போதுமே பாதிப்பை எதிர்கொண்டுவரும்
தமிழ் மக்கள்
இந்த நாட்டில் உள்ள தமி।ழர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் வாழ்கின்றனர். இதற்குப் போரை மட்டுமே காரணம் கூறிக்கொண்டு இருக்க முடியாது. அதற்கு மேலாக, நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. போரின் பின்னராவது இனவாதம் ஒழிந்து தாம் நிம்மதியாக வாழலாமெனத் தமிழர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களது விருப்பத் துக்கு மாறாகவே எல்லாமும் இடம்பெற்று வருகின்றன.
அரசு தமிழ் மக்களது குறைகளைப் போக்குவதில் அக்கறையுடன் செயற்படவில்லை. இதனால் எதையும் போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். போராட்டம் அவர்களின்மீது திணிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளைத் தேடிக் களைத்துப் போயுள்ள நிலையில், தொடர்ப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். தமது உறவுகள் நாட்டின் எங்கோ ஓரிடத்தில் உயிருடன் உள்ளதாகவே இவர்கள் இன்னமும் நம்புகின்றனர். இவர்களை எவருமே போராடுமாறு தூண்டிவிடவில்லை. ஆனால் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடுமாறு அவர்களைத் தூண்டுவதாக அரச தலைவர் கூறியுள்ளதை ஏற்க முடியவில்லை.
இறுதிப் போர் இடம்பெற்றபோதுகூட மகிந்த அரசு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது மிகக் கடுமையாக நடந்து கொண்டது. அவற்றைக் கண்காணிக்கவும் செய்தது. போரின் இறுதிக் கட்டத்தில், போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து அங்கு தொண்டுப் பணிகளில் ஈடுபட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறிவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்த நிறுவனங்கள் அறிந்துவிடக் கூடாது என்பதே இதற்கான பிரதான காரணமாகும். இவர்கள் வௌியேறுவதை விரும்பாத மக்கள், அவர்களைத் தடுத்துள்ளனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் தம்முடன் தங்கியிருப்பது தமக்குப் பாதுகாப்பென அவர்கள் நம்பியதே இதற்கான காரணமாகும். அரச சார்பற்ற நிறுவனங்களை வௌி யேற்றிவிட்டு மகிந்த அரசு தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு போரை நடத்தியது. மக்கள் தங்கியிருப்பதற்கென ஒதக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதிகள், மருத்துவ மனைகள் ஆகியனவும் தாக்குதல்களுக்கு உள்ளாகின. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இவற்றுக்கான சாட்சியங்களைப் பெறமுடியவில்லை.இதன் மூலம் அரசின் நோக்கமும் நிறைவேறியது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான அரச தலைவரது குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை
ஆனால் மகிந்த பாணியில், தற்போதைய அரச தலைவர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியவில்லை. அதைவிட காணாமல் போனவர்களும், அரசியல் கைதிகளும் இல்லையெனவும் அவர் மீண்டும் கூறியுள்ளதை யும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மேலும் படையினர் கையகப்படுத்தி வைத்திருந்த பொதுமக்களின் காணிகள் தொடர்பாகவும் அரச தலைவர் தெரிவித்த கருத் தையும் முரண்பாடானதொன்றாகவே கருத வேண்டியுள்ளது. பொதுமக்களின் காணிகளில் பெரும் பாலா னவை ஏற்கனவே விடுவிக் கப்பட்டுவிட்டதாகவும், சிறிய அளவிலான காணிகள் மட்டுமே விடுவிக் கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது.
தமிழர்களுக்குப் போராட்டங்கள் புதிதானவை அல்ல. நாடு சுதந்திரமடைந்த நாளிலிருந்து அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
தமிழர்களது போராட்டங்கள் வரிசையில் மிகக் கடைசியானது
இரணைதீவு மக்களது போராட்டம்
இறுதியாக ஆரம்பிக்கப்பட்ட இரணைதீவு மக்களின் தொடர்ப் போராட்டம், உலகின் கவனத்தை ஈர்த்துவிட்டது. பெருமளவு மக்கள் வசதியீனங்களுக்கு மத்தியில் தாம் வௌியேற்றப்பட்ட தமது பூர்வீக மண்ணில் இருந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைக்கூட பிறரின் தூண்டுதலால் இடம் பெறுவதாகச் சிலர் கூறலாம்.ஆனால் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையிலேயே அந்த மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அந்த மக்கள் சுயமாக எடுத்த முடிவு என்பதால், அதைக் கொச்சைப்படுத்த முடியாது.
அரச தலைவர் இனியாவது தமிழர்களின் போராட்டங்களின் உண்மையான தார்ப்பாரியத்தை உணர்ந்து கருத்துக் கூற வேண்டும். வடக்கில் புலிகள் மீண்டும் தலையெடுத்துள்ளதாக இனவாதிகள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அரச தலைவர் கூறுகின்ற கருத்துக்கள் அவர்களை மேலும் ஊக்குவிக்கவே செய்யும். அது மட்டுமல்லாது தமிழர்கள் தொடர்பாக மற்றவர்கள் தவறாக நினைப்பதற்கும் வழி வகுத்துவிடும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!