பச்சிலைப்பள்ளியில் 225 ஏக்கர் காணிகள் இந்த வாரம் விடுவிப்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட 225.31 ஏக்கர் காணி, இம்மாத இறுதியில் விடுவிக்கப்படும் என்றுத பிரதேச செயலாளர் ப.ஜெயராணி, தெரிவித்தார்.

அக்காணிகளுக்கு தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகின்றது. வேம்பொடுகேணியில் ஏ- 9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி வரையுள்ள 200 மீற்றர் பகுதி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்துள்ள மேலும் 300 மீற்றர் வரையான பகுதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முகமாலையில் ஏ- 9 வீதிக்கு சமனான வடக்கு நோக்கி வரையுள்ள பகுதி விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், இத்தாவிலில் சந்தியிலிருந்து முருகையன் கோவிலிலுக்குச் செல்லும் வீதிக்கு மேற்கு பக்கமாக ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட ஏ- 9 வீதியிலிருந்து 200 மீற்றர் பகுதியைத் தொடர்ந்து, உயர் மின்வலு வலையமைப்பு வரையான மேலும் 887 மீற்றர் வரையான பகுதி விடுவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆதலால், மேற்கூறப்பட்ட இடங்களுக்குரியவர்கள் மீள்குடியேற்றச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டு, மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகளை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளுமாறு, அவர் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!