முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் காலமானார்

INDIA – JUNE 26: George Fernandes (Portrait) (Photo by Das Saibal/The India Today Group/Getty Images)
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தனது 88வது வயதில் இன்று காலை புதுடில்லியில் காலமானார்.

சமீப காலமாக அல்சைமர் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஸ் பெர்னான்டசுக்கு, சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.

இன்று காலை 6 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து புதுடெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார்.

மூத்த தொழிற்சங்கத் தலைவரான ஜோர்ஜ் பெர்னான்டஸ், ஊடகவியலாளராக, விவசாயியாக, அரசியல்வாதியாக பன்முக ஆளுமை கொண்டவர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் உருவாக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர்,பின்னர் சமதா கட்சியை நிறுவினார்.

கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர், மகாஷ்டிரா, பிகார் மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு ஐந்து தடவைகள் உறுப்பினராகத் தெரிவானவர்.

வி.பி. சிங் அமைச்சராவையில் மத்திய தொடருந்து துறை அமைச்சராகப் பணியாற்றிய இவர், அடல் பிகாரி வாஜ்பாயி அரசாங்கத்தில், பாதுகாப்பு அமைச்சராக இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தார்.

ஈழத் தமிழரின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக செயற்பட்ட, இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர் ஜோர்ஜ் பெர்னான்டஸ்.

ஈழத் தமிழரின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!