இரண்டு பிரதான கட்சிகளின் இணக்கத்துடன் புதிய அமைச்சரவை தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் – 14ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படும். தலைமை அமைச்சருக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. அவர்கள் பதவி விலகவேண்டும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அமைச்சரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. பல விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது. அமைச்சரவை மாற்றம் மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது ரணிலுக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியினர் தொடர்பிலும் பேச்சு நடத்தப்பட்டது.
ரணிலுக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியினரை உடன் பதவி நீக்க வேண்டும். ரணில் தலைமையில் தொடர்ந்து அமைச்சரவையிலும் பதவிகளிலும் இருப்பதற்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. புதிய அமைச்சரவை குறித்து கூட்டு அரசின் இரு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்தன. புதிய அமைச்சரவை தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் நியமிக்கப்படும். இந்த யோசனைக்கு மைத்திரியும் உடன்பட்டார் – என்றார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியினர் ஏழு பேருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப் பெற்று விட்டு 16 பேருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருமாறு ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து 16 பேருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று கையளிக்க ஐக்கிய தேசியக் கட்சி உத்தேசித்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!