கூட்டரசின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இந்த விடயம் தொடர்பில் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகிறார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இனிவரும் காலப்பகுதியில் மக்கள் மனங்களை வெல்லும் வகையிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காகவும், நாடாளு மன்றம் கலைக்கப்படும்வரை இதே அமைச்சரவையைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலுமே அவர் இவ்வாறு ஆலோசனை பெற்றுவருகிறார் எனவும் தெரியவருகின்றது.
கூட்டு அரசு உதயமானதிலிருந்து இதுவரையில் அமைச்சர்கள் தமது அமைச்சுகளின் ஊடாக செய்துள்ள வேலைத்திட்டங்கள், இடையிடையே மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் வினைத்திறனுடன் செயற்பட்டுள்ளனவா என்பது உள்பட மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் அரச தலைவர் மைத்திரி ஆராயவுள்ளார்.
இதற்காக அமைச்சுகளின் செயலாற்று அறிக்கைகளை ஆய்வுக்குட்படுத்தி அது சம்பந்தமாக தனக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு தனது செயலருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று மைத்திரி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தலைமை அமைச்சர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் கூட்டு அரசில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி இரண்டுபட்டுள்ளது.
கூட்டரசில் அங்கம் வகிப்பதா அல்லது இல்லையா என்பது சம்பந்தமாக சுதந்திரக் கட்சியின் முடிவு இன்றிரவு வெளியாகவுள்ளது. அதன் பின்னரே புத்தாண்டுக்கு முன்னரே அமைச்சரவை மாறுமா அல்லது புத்தாண்டுக்குப் பின்னர் அது நடைபெறுமா என்று இறுதி முடிவெடுக்கப்படும்.
அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னர் அரச தலைவர் மைத்திரிக்கும், தலைமை அமைச்சர் ரணிலுக்கும் இடையே சிறப்புச் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது முக்கிய திணைக்களங்களைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கும் நிலைப்பாட்டை ரணிலிடம் மைத்திரி எடுத்துரைப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இ.தொ.கா., ஈ.பி.டி.பி. ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. தனியாட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பிரதான கட்சிகளிடம் இல்லாததால் கூட்டரசு தொடர்வதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!