குடும்ப தகராறில் உயர் மின் கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளி தற்கொலை!

ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது32) கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (28). இவர்களுக்கு கிரிஜா (8). ஆரியா (6). என 2 மகள்கள் உள்ளனர். சென்னையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஊருக்கு வந்த அவர் திரும்பவும் சென்னைக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரமேஷ் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நெல்வாய்பாளையம் என்ற இடத்திற்கு சென்று அங்கு பயன்பாட்டிற்கு வராத 100 அடி உயர மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரது மனைவி கீதாவிற்கும் களம்பூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் உறவினர்கள் ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ரமேஷ் கீழே இறங்க மறுத்து விட்டார்.

இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதுகாப்பு வலைகளை மின் கோபுரம் அருகே பிடித்தவாறு நின்றிருந்தனர். அப்போது ஊர் காரர்கள் சிலர் மின் கோபுரம் மீது ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். தன்னை யாரேனும் காப்பாற்ற முயற்சி செய்தால் கீழே குதித்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து போலீசார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ரமேஷ் கீழே இறங்க வில்லை. அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி. செந்தில் ரமேஷின் செல்போனுக்கு போன் செய்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் ரமேஷ் தற்கொலை முயற்சியை கைவிடவில்லை.

பேசி கொண்டே இருந்த அவர் சற்றும் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார். அப்போது பாதி வழியில் மின் கோபுர கம்பியின் மீது ரமேஷின் தலை மோதி மூளை சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்ட அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். போலீசார் உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!