வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! – ஜனாதிபதி

வடக்கு மக்களின் வறுமை நிலைக்குப் பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரிதமாகத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பிரதேச மக்களுக்கு அவர்களது விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் உரியவாறு பெற்றுக் கொடுக்கப்படின் வட மாகாணத்தில் நிலவும் ஏனைய அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

சுற்றாடல் பாதிப்புகளின்றி நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற்திட்டத்தினூடாக துரித மற்றும் வெற்றிகரமான பெறுபேறுகளை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

வட மாகாண நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வடமத்திய பாரிய கால்வாய்த்திட்டம், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள “யாழ்ப்பாணத்திற்கு நீர்” செயற்திட்டம் ஆகியன தொடர்பாகவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஜயிக்கா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் “எல்லங்கா” குளக் கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!