நீதியைப் பெற்றுத் தரமுடியாதவர்கள் எவ்வாறு காலஅவகாசம் கோர முடியும்?

காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஐ.நாவிடம் இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்குமாறு கோர முடியும்? அதற்கு இவர்கள் யார்? என மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

“எங்களது போராட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்களை நிறைவுப் பெற்றுள்ளது. இதுவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.கிளிநொச்சிக்கு சில வருடங்களுக்கு முன் பிரதமர் ரணில் வருகை தந்திருந்த போது , மகிந்தவின் பிள்ளைகள் காணாமல் போயிருந்தால் அவர்கள் இப்படியிருப்பார்களா? எனவே நான் பதவிக்கு வந்தவுடன் உங்களுக்கு தீர்வை தருவேன் என்றார்.

இதன்போது பிள்ளை காணாமல் ஆக்கப்பட்ட தாய் ஒருவர் அவரின் காலில் வீழ்ந்து கதறி அழுதார். தனது ஒரேயொரு மகனை மீட்டுத்தருமாறு கோரியிருந்தார். ஆனால் பதவிக்கு வந்த ரணில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என யாழப்பாணத்திலும், மறப்போம் மன்னிப்போம் என கிளிநொச்சியிலும் தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு தெரிவித்து போது எங்களது வாக்குகளால் பதவிக்கு வந்த பிரதிநிதிகள் வாய் மூடி மௌனமாக இருந்துள்ளனர்.அது மாத்திரமன்றி கடந்த காலத்தில் நடந்துகொண்டது போன்று தற்போதும் இலங்கை விடயத்தில் ஐ.நாவுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!