வெளிநாட்டில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கனேடியர்: கடவுசீட்டு பறிமுதல்!

எகிப்து விமான நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்ட கனேடியரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். கனேடியரான யாசர் அகமது அல்பாஸ் கடந்த திங்களன்று கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். பொறியாளரான இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே எகிப்தில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த திங்களன்று ஒன்றாரியோவில் உள்ள குடியிருப்புக்கு திரும்பும் வகையில் கெய்ரோ விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது யாசர் அகமதுவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். பின்னர், அவரது பெயர் சர்வதேச விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தமது குடும்பத்தாருக்கு குறுந்தகவல் ஒன்று அனுப்பிய யாசர் அகமது, அவர்கள் அனைவரையும் அன்பு செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே அவரிடம் இருந்து குடும்பத்தாருக்கு கிடைத்த கடைசி தகவல். இந்த நிலையில் கனேடிய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்த யாசரின் மகள், தமது தந்தையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவரை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். யாசரின் கைது நடவடிக்கையை உறுதி செய்துள்ள கனேடிய அதிகாரிகள், வேறு தகவல்களை வெளியிட மறுத்துள்ளது.

தற்போது விசாரணை கைதியாக டோரா சிறைச்சாலையில் யாசர் அடைக்கப்பட்டுள்ளதாக கூறும் அவரது மகள் அமல், தமது தந்தை எந்த அரசியல் சார்பும் இல்லாதவர் அவருக்கு ஏன் எகிப்திய அரசாங்கம் அநீதி இழைக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். எகிப்தியர்களான அல்பாஸ் குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக கனடாவில் குடியிருந்து வருகின்றனர். இருப்பினும் தொழில் மற்றும் சுற்றுலாவுக்காக ஆண்டுக்கு பலமுறை எகிப்துக்கு சென்று வந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!