தமிழ்த் தலைமைகள் மௌனம் காப்பது ஏன்? – தவராசா கேள்வி.

தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்வதற்காக, தமிழ்த் தலைமைகள், இரட்டை வேடம் போடுவதாகவும், அதனாலேயே பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்துத் தொடர்பாக அவர்கள் மௌனம் காப்பதாகவும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, குற்றம்சாட்டியுள்ளார். கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள்,இன்றைக்கு அந்த மக்களுக்காக அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்பட்டு வருகின்றன.

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், எங்களது தமிழ்த் தலைமைகள், சரியான வழியில் இதனைக் கையாள வேண்டியது அவசியம். தற்போதைய அரசாங்கத்தின் கீழ், தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், அரசாங்கத்துக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்துவதாக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனூடாகவே எமது பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிச் செல்லமுடியும்.

ஆனால், அந்த அழுத்தம் அல்லது ஒருமித்த முடிவு இல்லாவிட்டால், ஏமாற்று ஐ.நா பிரேரணையே மீண்டும் அமையக்கூடிய நிலைமையே காணப்படுகிறது. கடந்த அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நிலைமையே காணப்படுகின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!