கேப்பாப்புலவு காணி விவகாரம் – ஆளுநர் நடத்திய சந்திப்பு முடிவின்றி நிறைவு!

கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது பூர்விக நிலங்களை விடுவிக்க கோரி 727 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவ ரும் மக்களுக்கும் வட மாகாண ஆளுனருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு உடனடி தீர்வுகள் ஏதும் இன்றி நிறைவு பெற்றுள்ளது.

வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, கேப்பாபுலவு பகுதியில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி 727 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் 3 பேரும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிடடவர்கள் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். கலந்துரையாடலுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கலந்துரையாடலில் இறுதியில் ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் காணி உரிமையாளர்களும் இராணுவத்தினரும் நேரடியாக சந்தித்து தமது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கேப்பாபுலவு மக்கள் மத்தியில் காணி தொடர்பான குழப்பம் உள்ளதால் குழு ஒன்றை அமைத்து அவர்களூடாக மக்களின் விருப்பங்களை அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கேப்பாபுலவு மக்கள் தமது காணிகள் குறித்து மாற்று கருத்துக்களை கொண்டுள்ளமையால் இறுதித் தீர்மானத்தை இன்று எட்ட முடியாத நிலமை காணப்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது காணி விடுவிப்பு தொடர்பில் ஒரு கருத்தினையும் போராட்டத்தில் ஈடுபடாத பத்து பேர் அளவில் வேறு ஒரு கருத்தினையும் கூறுவதால் இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!