புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் ஆகியவை தொடர்பில் ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடவுள்ளது. புதிய அரசியலமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல் முறைமை, நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பில் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் மட்டும் கட்சிகள் இடையே இணக்கப்பாடு – ஒருமித்த கருத்து நிலவுவதால், அதிகாரப் பகிர்வை மட்டும் அரசமைப்பினுள் எப்படி புகுத்துவது – அதனைச் செயற்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 4 பேர் கொண்ட புதிய குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு, ஐ.நாவின் கால அவகாசம் ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளில் உள்ளனர்.
இவை தொடர்பில் ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எதிர்வரும் 5ஆம் திகதி ஆராயவுள்ளது. அன்று பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. அதற்கு முன் காலையில் அல்லது மாலையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!