யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் நிலங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட 64 ஏக்கர் நிலப்பரப்பில் 62 ஏக்கர் நிலப்பரப்பை சுற்றுலா அதிகார சபைக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று வடக்கு மாகாண ஆளுநரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கீரிமலைப் பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகையுடன் கூடிய 64 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த இடத்தில் 2 ஏக்கர் நிலப்பரப்புக்குள் கடற்படைத் தளத்தை நகர்த்தி எஞ்சிய 62 ஏக்கர் நிலப்பரப்பையும் சுற்றுலா அதிகார சபைக்கு வழங்குவதற்கு ஜனாதிபதியுடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள 20 ஏக்கர் நிலப்பரப்பை மட்டுமே சுற்றுலா அதிகார சபையிடம் வழங்குவது தொடர்பில் ஆராய முடியும். அதற்கு மாறாக மக்களின் வாழ்விடம், வரலாற்று ஆலயப் பகுதி, பொது மயானம், கிருஸ்ணன் ஆலயம், சடையம்மா மடம், குழந்தைவேல் சுவாமி சமாதி, காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றை மக்களிடமே வழங்க வேண்டும். இதன்படி 42 ஏக்கர் நிலப்பரப்பை மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!