முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு பெண் என்ஜினீயரை 2-வதாக திருமணம் செய்த மந்திரவாதி

கரூர் அருகே முதல் மனைவியை ஏமாற்றி 2-வதாக பெண் என்ஜினீயரை திருமணம் செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 31). பில்லி, சூனியம் உள்ளிட்ட செயல்களை செய்து வந்த மந்திரவாதியான இவர் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் தும்பிவாடி பகுதியில் சிறியதாக கோவில் ஒன்றை கட்டி பூஜைகள் நடத்தி வந்தார். இந்த கோவிலுக்கு பொதுமக்கள் பலர் சென்று, பாலாஜியிடம் குறி கேட்டு வந்தனர். பக்தர்களின் பிரச்சனைகள் தீர பரிகார பூஜையும் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த கோவிலுக்கு கரூரை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவர் அடிக்கடி சென்று வந்தார். இதனால் அவருக்கும் பாலாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த நிலையில் கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ வந்து வாழ்த்தினர். பாலாஜி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு, திருவாரூர் மாவட்டம் ஐ.பி.கோவில் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (46) என்பவர் வந்தார்.

அவர் பாலாஜியிடம் தகராறு செய்ததோடு, உடனே வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்துமாறும் அங்கிருந்த உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரிடம் கேட்டபோது, பாலாஜிக்கு எனது மகளுடன் ஏற்கனவே திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆனால் திருமணத்தை மறைத்து இப்போது 2-வது திருமணம் செய்துள்ளார் என்றார். இதனால் பெண்ணின் பெற்றோர் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி நின்றனர்.

இதனிடையே மகாலட்சுமி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், பாலாஜி அடிக்கடி சுடுகாட்டுக்கு சென்று மாந்திரீக பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்து வந்தார். இதனால் அவருக்கும் எனது மகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனது மகள் பல முறை எச்சரித்தும் பாலாஜி மாந்திரீக பூஜையில் ஈடுபடுவதை கைவிடவில்லை. இதனால் அவள் பிரிந்து எங்களுடன் வந்து விட்டாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எனது மகளுக்கு தெரியாமல் முதல் திருமணத்தை மறைத்து சட்ட விரோதமாக 2-வது திருமணம் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி பாலாஜியை கைது செய்தனர். தொடர்ந்து அவர் வேறு ஏதாவது பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளாரா? எதற்காக மாந்திரீக பூஜையில் ஈடுபட்டார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!