கல்முனைப் பிரச்சினையை பிரதமரே தீர்க்க வேண்டும்! – மாவை சேனாதிராஜா

?????????????????????????????????????????????????????????
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்குமாக இருந்தால், எதற்காக அதன் பாராளுமன்ற உறுப்பினரான ஹரீஸ் அவ்விடயத்தை பாராளுமன்றத்தில் பேசினார் என்று கூட்டமைப்பின் உறுபப்பினர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கும் அதேநேரம், பிரதமர் இவ்விடயத்தில் தலையிட்டு சுமுகமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 5ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதில் எந்த தவறும் இல்லை. கல்முனை பிரதேசம் தனியான தமிழ் பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டும் என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் விடயம். இந்த விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் துரதிஷ்டவசமாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹரீஸ் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது இவ்விடயத்தில் தவறுதலான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதற்கு எமது உறுப்பினர் கோடீஸ்வரனும் தனது பதில் கருத்தை முன்வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச வேண்டுமெனக் கூறும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினரான ஹரிஷ் இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் பேசாமல் எம்மிடம் பேசியிருக்கலாம்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது குறித்த பிரச்சினையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தீர்வுகளை எட்டவே நாம் முயற்சிக்கின்றோம். இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு நடத்தி சுமுகமாக தீர்வு காணத் தயாராகவே இருக்கிறோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள வேண்டும். அடுத்த வாரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்விடயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!