90 வயது ஆதிவாசி மூதாட்டியை கற்பழித்த தொழிலாளி கைது

தூங்கியபோது புதருக்குள் இழுத்துச்சென்று 90 வயது ஆதிவாசி மூதாட்டியை கற்பழித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இருட்டி அருகே உள்ளது ஆரளம் தோட்டம். இந்த பகுதியை சேர்ந்தவர் பென்னி (வயது 45). இவர் சம்பவத்தன்று இரவு அருகில் வசித்த 90 வயது ஆதிவாசி மூதாட்டியை வாயை பொத்தி ஆற்றங்கரையோரம் இழுத்துச்சென்றார்.

அங்குள்ள புதரில் வைத்து மூதாட்டியை கற்பழித்தார். மூதாட்டி மயக்கம் அடைந்தார். பின்னர் பென்னி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு முழுவதும் ஆற்றங்கரையோரம் மூதாட்டி கிடந்தார்.

விடிந்ததும் மூதாட்டி மாயமானதை அறிந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது புதரில் மூதாட்டி மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மீட்டு இருட்டி தாலுகா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மூதாட்டி கற்பழிக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.

இது குறித்து ஆரளம் போலீசுக்கு புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். மயக்கம் தெளிந்த மூதாட்டி வீட்டருகே வசிக்கும் பென்னி தன்னை கடத்திச்சென்று கற்பழித்ததாக கூறினார். புகாரின் பேரில் போலீசார் பென்னியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று போலீசார் பென்னியை கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு, ஆதிவாசிகளுக்கு தொந்தரவு கொடுத்தது என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பென்னியை தலச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மூதாட்டியின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் தலச்சேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!