மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்தார்

குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே கருப்புகோடு பகுதியை சேர்ந்தவர் 96 வயதான பொன்னம்பல பிள்ளை இவருடைய மனைவி தாணுபாய் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் வீட்டில் பொன்னம்பலபிள்ளையும், தாணுபாயும் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தாணுபாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் முதுமையும் அவரை வாட்டியது. அப்போது அருகில் இருந்தபடி பொன்னம்பலபிள்ளை அவரை கவனித்து வந்தார். அந்த சமயத்தில், நீ இறந்து விட்டால், நானும் உன்னோடு வந்து விடுவேன் என்று பொன்னம்பலபிள்ளை தன்னுடைய மனைவியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் தாணுபாய் திடீரென உயிரிழந்துவிட்டார். மனைவி இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் பொன்னம்பலபிள்ளையும் நிலைகுலைந்து போனார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வாழும் போது சந்தோசமாக இருந்த தம்பதி, மரணத்திலும் இணை பிரியாமல் சென்று விட்டனர் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!