மனைவியை கத்தியால் குத்திவிட்டு, எரித்து கொலை செய்த கணவர்.

புதுச்சேரியில் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, மனைவியை கத்தியால் குத்திவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி முதலியார்பேட்டை ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயநாதன். இவர் மனைவி வனஜா மற்றும் கல்லூரி பயிலும் மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையே மனைவி வனஜாவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் ஜெயநாதன். இந்நிலையில் இது தொடர்பாக இன்று மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு முற்றியுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியை அருகில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு, வீட்டு வெளியே இருந்த ஏணியில் கட்டி வைத்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்த ஜெயநாதனை போலீசார் கைது செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!