குடியுரிமை துறப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேசவுள்ளார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிடடுள்ளன.

கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் செல்லும் அவர், இந்தப் பயணத்தின் போது அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் ஆவணங்களை கடந்த 6ஆம் நாள் அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்துள்ளார்.

இந்த விண்ணப்பம் தற்போது அமெரிக்க அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா செல்லும் அவர், அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து தமது குடியுரிமை துறப்பு விண்ணப்பம் குறித்து கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியுரிமை துறப்பு தொடர்பான செயல்முறைகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடித்து விட முடியும் என்று கோத்தாபய ராஜபக்ச தமக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!