தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுக் காலை இடம்பெற்ற போது, அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த னர். கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்ற பின்னர் அரசு கண்டுகொள்வதில்லை. திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று காரசாரமாக கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாலையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்புக்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பங்கேற்கவில்லை.
‘தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அவற்றை நிறைவேற்றுவோம் என்று கூடக் கூறுவதற்கு அரசு தயாராக இல்லை. அரசியல் தீர்வை எதிர்பார்த்து நிற்கையில், அற்ப அபிவிருத்திக்காக அரசை ஆதரிப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள். குழப்புகின்றோம் என்ற கருத்தோ, கட்சி முடிவை மீறிச் செயற்பட்டேன் என்ற பழிச்சொல்லோ வேண்டாம் என்பதற்காக மட்டும் வாக்களிப்பது மனதை உறுத்துகின்றது’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கூட்டமைப்புக்கு வாக்குறுதி வழங்கிவிட்டு, ஓர் அமைச்சரையும் கட்சியையும் வளர்க்கும் செயற்பாடே வன்னியில் தொடர்கின்றது. வாக்குறுதி வழங்கப்படுகின்றதே தவிர செயற்படுத்தப்படவில்லை. எம்மை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். இப்படியே தொடர்ந்தால் வன்னியில் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு இரண்டு ஆசனத்தைப் பெறும் நிலைதான் ஏற்படும். கூட்டமைப்பை மக்களிடமிருந்து செல்வாக்கை இழக்கச் செய்யும் நடவடிக்கையே தொடர்கின்றது என்றார்.
‘வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம், மகாவலி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கைகளால் வன்னியில் நிலம் எஞ்சுமா என்ற சந்தேகம்தான் ஏற்படுகின்றது. அபிவிருத்தியை விட எமது மண்ணையே பாதுகாக்கவேண்டும்’ என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.
கல்முனை தொடர்பில் வாக்குறுதி வழங்கப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை. தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
எமது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டை எதிர்ப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதிலளித்தார்.
எமது ஆதரவைக் கோரும் தேசியக் கட்சிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது கட்சிகளை வளர்க்க அனுமதிக்கக் கூடாது என்று பலமுறை கூறியும், அந்தச் செயற்பாடு தொடர்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
‘இன்றைய நிலையில் தீர்வு இல்லை. அபிவிருத்தி இல்லை என்ற நிலமை ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களால் அதனைச் சகிக்க முடியாது. அபிவிருத்திக்காகவாவது ஆதரிக்கவேண்டிய நிலமை உள்ளது’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இறுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் அரசை ஆதரித்து கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!