உச்சநீதிமன்றின் கருத்தை அறிய முடிவெடுக்கவில்லை – சாந்த பண்டார

தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார,

”தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர் இதுபற்றி கட்சிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

கட்சி உறுப்பினர்களுடன் எந்த அதிகாரபூர்வ கலந்துரையாடல்களும் நடத்தப்படவும் இல்லை.

எனினும், தமது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் உள்ளது. அவ்வாறு செய்யலாமா என்பது பற்றி அவரே முடிவெடுக்க முடியும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!