பாடசாலை வாளாகத்தினுள் உயிரோடு எரிக்கப்பட்ட மாணவி; பங்களாதேஷில் சம்பவம்

பங்களாதேஷில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

பங்களாதோஷ் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி என்ற 19 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தனியார் பாடசாலையில் கல்விகற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த மாத இறுதியில் பாடசாலையின் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குறித்த மாணவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை ஆசிரியரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதையடுத்து அந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து, தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் குறித்த மாணவி பொய்யான முறைப்பாட்டை அளித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது முறைப்பாடு செய்த 11 நாட்களுக்கு பிறகு பரீட்சை எழுதுவதற்காக குறித்த மாணவி பாடசாலைக்கு சென்றுள்ளார்.

குறித்த மாணவியின் தோழி ஒருவர், அவரை பாடசாலையின் மேல் மாடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் 5 பேர், நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீதான முறைப்பாட்டை மீளப்பெறும்படி மிரட்டினர்.

அதனை ஏற்க மறுத்ததால் குறித்த மாணவி மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!