சிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம் நாள் முடிவெடுக்கிறது தமிழ் அரசு கட்சி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசு கட்சி வரும் 26ஆம் நாள் முடிவெடுக்கவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையிலேயே, இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

வரும் 26ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள் வரை இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிலேயே, அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவு குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடனான எதிர்கால நிலைப்பாடுகள் குறித்த தமது கட்சியின் நிரந்தரமான முடிவு இந்த மாநாட்டில் எடுக்கப்படும் என்று, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

“அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டனர்.

தமிழ் மக்களை இன்னுமொரு ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளுவதே அரசாங்கத்தின் நோக்கம்.” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!