கனடா வீசா கட்டுப்பாடுகள் தளர்வா?- மறுக்கிறார் கரி ஆனந்தசங்கரி

இலங்கையில் இருந்து கனடாவுக்குள் வீசா இன்றிப் பிரவேசிக்கலாம் என்று தவறான தகவல் பரப்பப்படுகின்றதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா கட்டுப்பாடுகள் அனைத்தையும் கனேடிய அரசு நீக்கிவிட்டதென்ற தவறான தகவல்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய விலக்களிப்பு நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.இலங்கையின் நிலைமை குறித்துக் கனேடிய அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில், இலங்கை குடிமக்களுக்கான வீசாக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கனடாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுவோர் யாராக இருந்தாலும், பொருத்தமான வீசாக்களுக்கு விண்ணப்பித்து, வழமையான அனைத்து நிபந்தனைகளையும் திருப்தி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனேடிய அரசு வீசா நடைமுறைகளில் ஏதாவது மாற்றங்களைச் செய்தாலோ, அல்லது சிறப்பு விலக்களிப்புக்களை வழங்கினாலோ, எனது அலுவலகம் உடனடியாக இந்த விபரத்தை வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள டொறீன் சவுந்தரநாயகம் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!