“அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்வதற்காக விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே அமைக்கப்படுகின்றன. அத்துடன் குற்றம் செய்யாதவர்கள் இதற்கு அச்சப்படத் தேவையில்லை” என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.
நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச்சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதையிட்டு அது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தலதா அத்துக்கோரள கூறுகையில்,
“திருடர்களை பிடிக்க வந்தவர்கள் திருடர்களாகியிருப்பதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சியினர் அரசாங்கம் மீது பாரியளவில் குற்றம் சாட்டி வந்தனர். அதன் காரணமாகவும் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அத்துடன் அரசாங்கம் அதிகாரத்துக்கு வரும்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து சட்டத்தை நிலைநாட்டுவதே பிரதானமாக இருந்தது.
அதற்காக பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நிதி குற்றப்புலனாய்வு பிரிவை அமைத்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். என்றாலும் கடந்த காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில தாமதங்கள் காரணமாக மோசடிக்காரர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தாமதமாகின.அந்த தாமதங்களை இல்லாமலாக்கும் வகையிலே ஊழல் மோசடி தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்காக 3 விசேட மேல் நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.
நீதிமன்ற திருத்த சட்டமூலம் ஊடாக இந்த விசேட நீதிமன்றங்களை அமைக்க பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தோம். என்றாலும் கூட்டு எதிர்க்கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த சட்டமூலத்துக்கு எதிராக 7மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
என்றாலும் திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்துக்கு முரண்படுவதாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், அரசியலமைப்புக்கு முரண்படாதவகையில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த சட்டமூலத்தை இன்றையதினம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றோம்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுடன் இதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அத்துடன் இந்த விசேட நீதிமன்றங்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கே அமைக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது. இவர்கள் தெரிவிப்பதுபோல் எமக்கு அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளவேண்டுமாக இருந்தால் சிராணி பண்டார நாயக்கவை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக ஜனாதிபதி நியமித்திருப்பார். அவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளை நாங்கள் செய்யவில்லை.
எனவே கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளினால் கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கே விசேட நீதிமன்றங்களை அமைத்து விசாரணைகளை துரிதப்படுத்தவிருக்கின்றோம். ஆரம்பமாக ஒரு நீதிமன்றமே அமைக்கப்படுகின்றது. அதற்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். விசாரணைகள் ஒத்திவைக்கப்படாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அத்துடன் விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக குற்றம் செய்யாதவர்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!